இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது!
63 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 86 ஆயிரத்து 498 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சத்து 3 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 123 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 கோடியே 61 லட்சத்து 98 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 63 நாட்களுக்கு பின்னர் இன்றுதான் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 66 நாட்களில் பதிவான குறைந்தபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவாகும்.