உத்தரபிரதேசம்: ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரபிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-09 03:07 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. 

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற பகுதியில் சென்ற போது சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். 

அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்