இளம்பெண்ணை வீட்டில் ஒருமாதம் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது

கேரளாவில் இளம்பெண்ணை வீட்டில் ஒருமாதம் அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-06-11 03:38 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண். இவர் பேஷன் டிசைனிங் துறையின் பணியாற்றி வந்தார். இதற்கிடையில், அந்த பெண்ணுக்கும் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பங்குச்சந்தை தொழிலதிபர் மார்ட்டின் ஜோசப் (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதில் இருந்து திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் முறையில் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர். கொச்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர்.

ஒன்றாக வாழ்ந்துவந்த இருவருக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை மார்ட்டின் ஜோசப் கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த சண்டையால், அந்த பெண் கடந்த மாதம் மார்ட்டினை விட்டு பிரிந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த மார்ட்டின் வீட்டிற்கு வரவில்லை என்றால் தன்னுடன் எடுத்த நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

மார்ட்டினின் மிரட்டலுக்கு பயந்த அந்த பெண் மீண்டும் கொச்சிக்கே திரும்பி மார்ட்டின் வீட்டிற்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்துள்ளார்.      
 
திரும்பி வந்த அந்த பெண்ணை மார்ட்டின் தனது வீட்டில் அடைத்துவைத்து பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்துள்ளார். பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் மார்ச் மாதம் 8-ம் தேதி தேதி வரை சுமார் ஒருமாதங்கள் அந்த பெண்ணை மார்ட்டின் பாலியல் ரீதியில் கொடுமை செய்துள்ளார்.

ஒருவழியாக கொச்சியில் உள்ள மார்ட்டினின் வீட்டில் இருந்து மார்ச் மாதம் தப்பிச்சென்ற அந்த பெண் போலீசிடம் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து அந்த பெண் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மார்ட்டின் மீது எர்ணாக்குளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரையடுத்து மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அந்த பெண் அளித்த புகாரில், பங்குச்சந்தையில் மாதம் 40 ஆயிரம் வருமானம் பெற்றுத்தருவதாகவும் கூறி தன்னிடம் மார்ட்டின் 5 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு இதுவரை பணத்தை தரவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், கொச்சியில் குடியிருப்பில் லிவ் இன் உறவில் வாழ்ந்துவந்தபோது மார்ட்டின் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும், தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கபப்ட்டது.

புகாரையடுத்து, மார்ட்டினை போலீசார் தேடிவந்தனர். ஆனால், கடந்த ஒருமாதமாக மார்ட்டின் தனது நண்பர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களுக்கு மாறிமாறி சென்று தப்பிவந்தான். இந்த விவகாரம் கேரள ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியதையடுத்து மார்ட்டினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், திரிச்சூர் மாவட்டம் அயங்குனு என்ற இடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மார்ட்டினை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்ட்டினை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன்பின்னர் காவலில் எடுத்து மார்ட்டினிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.   

மேலும் செய்திகள்