மராட்டியம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 பேர் படுகாயம்

மராட்டிய மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-06-17 08:49 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் பஹல்கர் மாவட்டம் டஹனா பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தனர்.  

அப்போது, பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், ஆலையில் தீப்பற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. 

இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஆலைக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், தீவிபத்தில் படுகாயமடைந்த 5 பேர் உள்பட அனைவரையும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் வெடிவிபத்தால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்