88 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு!: இன்று 53,256 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2021-06-21 04:22 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. தினமும் 1 லட்சத்துக்கு குறைவாகவே தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று 58 ஆயிரத்து 419 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்திருப்பது உறுதியானது.

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 ஆயிரத்து 256 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 1,422 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,88,185 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 7,02,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 28 கோடியே 00 லட்சத்து 36 ஆயிரத்து 898 ஆக உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்