தெலுங்கானா: அரசு விழாவில் முதல் மந்திரி காலில் விழுந்த கலெக்டர்

தெலுங்கானாவில் அரசு விழா ஒன்றில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் காலில் விழுந்து கலெக்டர் ஆசி பெற்றார்.

Update: 2021-06-21 08:55 GMT

சித்திபேட்,

தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் மற்றும் பிற அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில், சித்திபேட் மாவட்ட கலெக்டர் வெங்கடராம ரெட்டி முதல் மந்திரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  நிகழ்ச்சியில் சமூக இடைவெளி விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.  இதனிடையே, ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகங்கள், மாவட்ட காவல் துறை ஆணையரக வளாகம் மற்றும் எம்.எல்.ஏ. முகாம் அலுவலகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காலில் விழுந்தது பற்றி கலெக்டர் வெங்கடராம ரெட்டி கூறும்பொழுது, தெலுங்கானாவின் குழந்தையாக, அதிகாரியாக, மாநில வளர்ச்சியை காணும் ஆசி பெற்றுள்ளேன்.  தெலுங்கானாவில் நடந்து வரும் வளர்ச்சிக்கு முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அவர்களே காரணம்.

அனைத்து பிரிவு மக்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக பணியாற்றி கொண்டிருக்கும் அவரிடம் இருந்து நான் ஆசி பெற்றுள்ளேன்.  வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து ஆசி பெறுவது தெலுங்கானாவின் மரபு.  அவரை எனது தந்தை போன்று உணர்கிறேன்.  இதனை ஒரு பெரிய விசயம் ஆக்குவது என்பது சரியாகாது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்