பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் வருகிற செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-06-25 17:04 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 30ந்தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1ந்தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. 

பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இதனை மத்திய இணை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.  இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் வருகிற செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.



மேலும் செய்திகள்