வீடு பராமரிக்க பணம் தர மறுப்பு; மாமியார் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மருமகள்

ஆந்திர பிரதேசத்தில் வீடு பராமரிப்புக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில் மாமியார் மீது மருமகள் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

Update: 2021-06-27 15:38 GMT
கிருஷ்ணா,

ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் மண்டபாடு கிராமத்தில் வசித்து வருபவர் சக்கா லட்சுமி (வயது 55).  இவர் தனது மகன் சிவநாராயணா மற்றும் மருமகள் சொரூபா உடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அரசு நல திட்டம் ஒன்றின் கீழ் சக்காவுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கிடைத்துள்ளது.  மழை காலம் வரவுள்ள சூழலில், வீட்டு பராமரிப்புக்காக அவரது மகன் பணம் வேண்டும் என கேட்டு உள்ளார்.

ஆனால், அதற்கு சக்கா மறுத்து விட்டார்.  வேறு விசயத்திற்காக அந்த பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த அவரது மருமகள் சொரூபா, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதில் இருவரிடையே மோதல் முற்றியது.  இதனால், சொரூபா கொதிக்கும் எண்ணெய்யை மாமியார் மீது ஊற்றியுள்ளார்.  இதனை தொடர்ந்து குடிவாடா அரசு மருத்துவமனையிலும், பின்பு உயர் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து சொரூபா மற்றும் அவரது கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்