மகளுடைய காதலன் குடும்பத்தில் 4 பேர் சுட்டுக்கொலை; பஞ்சாப் ஆசாமி வெறிச்செயல்

மகளுடைய காதலன் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சுட்டுக்கொன்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-04 21:31 GMT
காதலால் கோபம்
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் பலர்வால் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சி்ங். அவருடைய மகள் அதே கிராமத்தை சேர்ந்த ஜெர்மன்ஜீத் சிங் என்பவரை காதலித்து வருகிறார். இந்த தகவல் அறிந்து சுக்ஜிந்தர் சிங் ஆத்திரம் அடைந்தார்.நேற்று காலை அவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, ஜெர்மன்ஜீத் சிங்கின் வயலுக்கு கோபாவேசத்துடன் சென்றார். அங்கு ஜெர்மன்ஜீத் சிங்கும், அவருடைய தந்தை சுக்விந்தர் சிங்கும் இருந்தனர். முதலில் அவர்களுக்கும், சுக்ஜிந்தர் சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் தலைக்கேறிய நிலையில், சுக்ஜிந்தர் சிங் துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில், குண்டு பாய்ந்து சுக்விந்தர் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெர்மன்ஜீத் சிங் காயமடைந்தார்.

தலைமறைவு
இதற்கிடையே, தகவல் அறிந்து ஜெர்மன்ஜீத் சிங்கின் தாத்தா மங்கள் சிங், சித்தப்பா ஜஸ்பீர் சிங், ஒன்றுவிட்ட சகோதரன் பாபன்தீப், மற்றொரு உறவினர் ஜஷன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மீதும் சுக்ஜிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டார். இதனால், மங்கள் சிங், ஜஸ்பீர் சிங், பாபன்தீப் ஆகியோர் பலியானார்கள். காயமடைந்த ஜெர்மன்ஜீத் சிங், ஜஷன் ஆகியோர் 
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, சுக்ஜிந்தர் சிங் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்