அசாமில் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,640- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. எனினும், அசாமில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்பரா, கோலகட், ஜோர்ஹட், லக்ஹிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத் மோரிகெளன் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 7ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் ஊரடங்கு காலத்தில் வணிகவளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.