உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி: அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் 2 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி செய்த அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் 2 பேர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2021-07-11 23:13 GMT
அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் கைது
அமெரிக்க நகரங்கள் மீது விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பு, அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் ஆகும்.இந்த அமைப்பைச்சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது வருமாறு:-

சுதந்திர தினத்தில் நாசவேலையில் ஈடுபட சதி

லக்னோவில் உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

லக்னோ உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் வரும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நாசவேலைகளை அரங்கேற்றுவதற்கு அன்சார் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மின்ஹாஸ் அகமது, மசீருதீன் ஆகிய 2 பேர் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களை பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், லக்னோவில் கைது செய்துள்ளனர்.இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும் திட்டம்
இருவரும் அல்கொய்தா அமைப்பின் உத்தரபிரதேச மாநில அமைப்பின் தலைவரான உமர் ஹல்மண்டியின் கட்டளைப்படி சுதந்திர தினத்தன்று மாநிலத்தின் பல நகரங்களில் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.முக்கியமான இடங்களிலும், நினைவுச்சின்னங்களிலும், மக்கள் கூட்டம் கூடுகிற இடங்களிலும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தவும், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக அவர்கள் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சேகரித்துள்ளனர்.இந்த பயங்கரவாத அமைப்பினர் லக்னோவில் மட்டுமல்ல, கான்பூரிலும் உள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளின் கூட்டாளிகளை கைது செய்வதற்கு பல இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கூட்டாளிகள் ஓட்டம்
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போது, அவர்களது கூட்டாளிகள் வீடுகளை விட்டு ஓடி விட்டதாக தெரிவித்தனர். உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து, பயங்கரவாத தடுப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள 2 பயங்கரவாதிகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உ.பி.யில் பல்வேறு நகரங்களில் சுதந்திர தினத்தன்று நாசவேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது, அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்