பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தின விழா மலர் கண்காட்சி ரத்து

கொரோனா பரவல் காரணமாக பெங்களூரு லால்பாக்கில் தொடர்ந்து 3-வது முறையாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-17 21:20 GMT
பெங்களூரு,

பெங்களூரு லால்பாக்கில் ஆண்டு தோறும் குடியரசு மற்றும் சுதந்தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) சுதந்திர தின விழா மலர் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி ஜனவரி மாதம் நடைபெறும் மலர் கண்காட்சியும் நடைபெறவில்லை. 

இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதனை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

கொரோனா 3-வது அலை ஆகஸ்டு மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மலர் கண்காட்சி நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் லால்பாக்கியில் நடைபெற இருந்த சுதந்திர தினவிழாவுக்கான மலர் கண்காட்சியும் ரத்து செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பெங்களூரு லால்பாக்கில் தொடர்ந்து 3-வது முறையாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்