கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் குப்பை கொட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.
கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குப்பை கொட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெலகாவி,
கர்நாடகாவின் பெலகாவி நகரில், பல்வேறு சாலைகளில் குப்பை குவிந்துள்ளது. இதனை அள்ளி சுத்தம் செய்யவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் பற்றி அறிந்த பெலகாவி தெற்கு தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அபய் பாட்டீல், டிராக்டரில் குப்பையை நிரப்பி, தானே ஓட்டி வந்துள்ளார். இதன்பின் விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள, பெலகாவி மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் வீட்டு முன் குப்பையை கொட்டினார். குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுபற்றி அபய் பாட்டீல் கூறும்போது, குப்பையை அள்ளி சுத்தம் செய்யுங்கள் என 3 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, குப்பையை கமிஷனர் வீடு முன் கொட்டினேன்.
வரும் நாட்களில், இதேபோன்று குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்த முன் வராவிட்டால், மாவட்ட கலெக்டர் வீடு முன் குப்பையை கொட்டுவேன் என ஆவேசமுடன் கூறியுள்ளார்.