ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: ராணுவ மந்திரி வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ மந்திரி வீட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானார்கள்.

Update: 2021-08-05 01:24 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது முதல் அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. இதில் தலீபான்களின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் ராணுவ மந்திரி பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டின் முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர்.

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ அதன் பின்னர் மற்றொரு காரில் துப்பாக்கிகளுடன் வந்து இறங்கிய 4 பயங்கரவாதிகள் பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டை சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டனர்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையில் சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதேவேளையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒரு பெண் உள்பட அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலின் போது ராணுவ மந்திரி பிஸ்மில்லா கான் முகமதி வீட்டில் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல் அவரது குடும்ப உறுப்பினர்களும் ராணுவ வீரர்களால் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

இதனிடையே ராணுவ மந்திரியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் செய்திகள்