காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2021-08-21 03:42 GMT


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பயங்கரவாதிகள் உள்பட பலர் பதுங்கியுள்ள தகவல் கிடைத்து, அவந்திபோராவில் பாம்பூர் பகுதியில் க்ரூ என்ற இடத்தில் போலீசர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் நேற்று அதிகாலையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.  இந்த என்கவுண்ட்டரில் மற்றொரு பயங்கரவாதியையும் படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.  இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறும்போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் நடப்பு ஆண்டு ஜூலை 23ந்தேதி பாஸ்டுனா பகுதியில் அமைந்த அரசு பள்ளி ஒன்றின் பணியாளரை கொலை செய்ததில் தொடர்புடையவன்.  க்ரூ பகுதியை சேர்ந்த முசைப் முஷ்டாக் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என கூறினார்.

இந்த நிலையில், காஷ்மீர் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்கள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்