எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்கள் நாட்டுக்கு எதிராக போர் புரிய சதி செய்தனர்; கோர்ட்டில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்கள் நாட்டுக்கு எதிராக போர் புரிய சதி செய்ததாக சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த வரைவு குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

Update: 2021-08-24 03:51 GMT
எல்கர் பரிஷத் வழக்கு
புனே மாவட்டம் பீமா கோரேகாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி போர் வெற்றி தின பேரணி நடந்தது. அப்போது 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் புனேயில் எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அதன் விளைவாகவே போர் வெற்றி நினைவு நாள் பேரணியில் வன்முறை வெடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் எல்கர் பரிஷத் மாநாடு நடத்தியவர்களுக்கும் மாவோஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமூக ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஹனி பாபு, ஆனந்த் தெல்டும்டே, வெர்னான் கன்சல்வெஸ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த ஸ்டான் சுவாமி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்கள் மீது உபா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

போர் புரிய சதி
இந்தநிலையில் வழக்கு தொடர்பான வரைவு குற்றப்பத்திரிகையை தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்டு) என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் புரட்சி மூலம் மக்கள் ஆட்சியை அமைக்க வேண்டும் என நோக்கமாக கொண்டு இருந்தனர். மத்திய, மாநில அரசுக்கு எதிராக போர் புரிய சதி முயற்சி செய்து உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், மும்பை டாடா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு மாணவர்களை தேர்வு செய்ததாகவும் வரைவு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்