கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செப்டம்பர் 30 வரை அமல்; மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வருகிற செப்டம்பர் 30ந்தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு அமலானது. இதனால், நாடு முழுவதும் பேருந்து, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோன்று பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கோவில்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன. இதனால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
இந்த சூழலில், மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பு ஆண்டில் வருகிற செப்டம்பர் 30ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்து உள்ளது. பேரிடர் மேலாண் சட்டம் 2005ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.