காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீன கையெறி குண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து நேற்று திடீர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், கிர்ணி பகுதியை சேர்ந்த ஒரு நபரை கைது செய்த பாதுகாப்பு படையினர் அவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 கையெறி குண்டுகள், 2 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.