கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியது

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2021-09-08 14:44 GMT
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தீவிரம் பெரிதும் குறையாமல் தொடரும் சூழலில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கேரளாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42,83,494 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு விகிதம் 17.63% ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,001 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 27,579 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40,51,456 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,39,480 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்