உத்தரபிரதேசத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2021-09-13 17:48 GMT
முதல்-மந்திரி நேரில் ஆய்வு
பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாருக்கு செல்கிறார். அங்கு லோதா பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் மாநில பல்கலைக்கழகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். அலிகாரில், பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நேற்று போர்க்கால அடிப்படையில் நடந்தன. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் செல்வகுமாரியும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

ஹெலிகாப்டர் தரை இறங்க ஒத்திகை
பிரதமர் மோடி உள்ளிட்டோர் அமர்வதற்காக தனி மேடையும், அதன் இரு புறமும் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்வதற்காக 2 தனித்தனி மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.மேடை அலங்காரத்துக்கு நேற்று இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. மேடை அருகே பல்கலைக்கழகத்தின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது.கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் விழா நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதை வடிய வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 5 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும், கருப்பு பூனைப்படையினர் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கும், கிளம்புவதற்கும் ஒத்திகை பார்த்தனர்.

மேலும் செய்திகள்