கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோன வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே பல வாரங்களாக உள்ளது. டெல்லி மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
டெல்லியில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: டெல்லியில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 53 பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக உயிரிழப்பு இல்லை. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.