மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் அக்.31 -வரை நீட்டிப்பு
வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இன்னும் இயல்பு நிலைக்கு பல்வேறு துறைகளும் திரும்பவில்லை. இதனால், வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வருகிற 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 2020-க்கு பிறகு காலாவதி ஆகும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் கடந்த மாதம் (செப்டம்பர் 30) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ஒரு மாதம் நீட்டித்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.