உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதல்: 9 பேர் உயிரிழப்பு; இழப்பீடு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 27 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2021-10-07 06:29 GMT
பாரபங்கி,

டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் நகரை நோக்கி பேருந்து ஒன்று சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்துள்ளது.

இந்த நிலையில், பாரபங்கி நகரில் பாபுரி கிராமத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து திடீரென லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.  27 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  விபத்தில் சிக்கிய பேருந்தின் ஒரு பகுதியை அறுத்து, காயமடைந்த பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்