இந்திய விமான படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டை காக்கும் சவாலான தருணங்களில் தனித்துவமுடன் செயல்படுபவர்கள் என இந்திய விமான படை தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திய விமான படையின் 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஜியாபாத் பகுதியில் அமைந்த ஹிண்டன் விமான படை நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. விமான படை அணிவகுப்பும் நடத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தளபதிகள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.
இதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே, இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய விமான படை தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமான படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறை என்ற பொருள்படும். சவாலான தருணங்களில் மனிதநேய உணர்வுடன் செயல்பட்டு நாட்டை காக்கும் பணியில் தனித்துவமுடன் தங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த தினத்தில் நம்முடைய விமான படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.