பாபுல் சுப்ரியோ தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
மத்திய மந்திரி பொறுப்பு பறிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பாபுல் சுப்ரியோ, பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டபோது பாபுல் சுப்ரியோவின் பதவி பறிக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த பாபுல் சுப்ரியோ பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில், தனது பாஜக எம்.பி பதவியை பாபுல் சுப்ரியோ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நாளை சந்தித்து பாபுல் சுப்ரியோ தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.