தொடர்ச்சியான புகார்: மத்திய மந்திரியை சந்தித்த வான்கடே மனைவி
மராட்டிய ,மந்திரி நவாப் மாலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் சமீரை எந்த நேரமும் மும்பை போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பை அருகே உல்லாச கப்பலில் போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாக்கி பேசி வருகிறார்.
சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் அவர் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலியாக சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சமாக பணம் தரவேண்டும் என மிரட்டினார், சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்டார் என சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
நவாப் மாலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் சமீரை எந்த நேரமும் மும்பை போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சமீர் வான்கடே மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் எஸ்.என்.பிரதான், துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங்கை நியமித்துள்ளார். சமீர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.
பிரபாகர் செயில் என்ற சாட்சி, சமீர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யனை விடுவிக்க 25 கோடி ரூபாய் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. இது தவிர மும்பை போலீசாரும் சமீர் மீதான ஊழல் புகாரை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீரின் மனைவி, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது என கூறி இருந்தார்.
இந்த நிலையில் சமீர் வான்கடேவின் தந்தை தினியான்தேவ் வான்கடே மற்றும் மனைவி கிராந்தி ரெட்கர் வான்கடே ஆகியோர் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவை இன்று சந்தித்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.