அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் 14-ந்தேதி ஆலோசனை

திருப்பதியில் வரும் 14-ந்தேதி அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-11-02 23:01 GMT
திருப்பதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன், நேற்று மாவட்ட அளவிலான துறை தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் குறித்த தகவலை கலெக்டர் தெரிவித்தார். 

அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில், வருகிற 14-ந்தேதி, தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை மாபெரும் வெற்றி பெறச்செய்ய அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவ மையங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு போன்ற ஏற்பாடுகளையும் தவறாமல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்