லகிம்பூர் கேரி வன்முறை: மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
லகிம்பூர் கேரி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், கடந்த மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரிஅஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்திய மந்திரி மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜாமீன் மனு மீதான விசாரணை லக்கிம்பூர் கேரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கோரியதால், மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.