முல்லை பெரியாறு: தமிழக அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேரளாவுக்கு மத்திய அரசு கடிதம்
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேரளாவுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் உள்ள பழமையான முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வரும் கேரள அரசால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முட்டுக்கட்டை இருந்து வருகிறது.
இந்த நிலையில் முல்லை பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதம் கடந்த திங்கட்கிழமை வந்ததாகவும், அதற்கான பதில் கடிதம் விரைவில் அனுப்பப்படும் என்றும் கேரள அரசு அறிவித்து உள்ளது.