முன்னாள் மனைவி என நினைத்து வங்கி ஊழியரை வெட்டிய நபர்...!

முன்னாள் மனைவி விடுப்பு எடுத்திருந்த நிலையில் அவரது இருக்கையில் அமர்ந்திருந்த சக வங்கி ஊழியரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-15 15:42 GMT
கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பிஜூ என்பவரின் முதல் மனைவி ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை செய்து வந்துள்ளார். ஸ்வேதாவுடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதேவேளை ஸ்வேதாவுக்கும், பிஜூவுக்கும் இடையே விவாகரத்து ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.

இதற்கிடையில், ஸ்வேதா இன்று பணிக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார். அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா அமர்ந்து வேலை செய்துள்ளார்.

இந்நிலையில், அந்த வங்கிக்கு இன்று வந்த பிஜூ தனது முன்னாள் மனைவியான ஸ்வேதா தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக தவறுதலாக நினைத்து தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு வெட்டியுள்ளார். 

முகக்கவசம் அணிந்திருந்ததால் ஸ்ரீஷ்மாவை, பிஜூ தனது முன்னாள் மனைவி ஸ்வேதா என நினைத்துள்ளார். ஸ்ரீஷ்மா சக ஊழியரான ஸ்வேதா இன்று விடுமுறை என்பதால் அவர் அமர்ந்து வேலை செய்யும் அதே இருக்கையில் அமர்ந்து பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பிஜூ தனது முன்னாள் மனைவி என நினைத்து ஸ்ரீஷ்மாவை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் ஸ்ரீஷ்மா படுகாயமடைந்தார். 

இதனை தொடர்ந்து அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் ஸ்ரீஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். பிஜூவின் கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஸ்ரீஷ்மாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய ஸ்வேதாவின் முன்னாள் கணவர் பிஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்