வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பால் அமரிந்தர்சிங் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு
வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பால் அமரிந்தர்சிங் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உருவாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
சண்டிகார்,
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியாக இருந்த அகாலிதளம், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகி விட்டது.
விவசாயிகள் எதிர்ப்பால், அங்கு பிரசாரத்தை தொடங்க முடியாத நிலையில் பா.ஜனதா இருந்தது. விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டால் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு தயார் என்று முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர்சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.
வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, அவரது புதிய கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு கனிந்துள்ளது.
மேலும், பஞ்சாப் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள பா.ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.