தெலுங்கானாவில் ஒரே பள்ளியில் 28 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் அரசு குடியிருப்பு பள்ளியில் படிக்கும் 28 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா கம்மம் மாவட்டத்தின் வைராவில் உள்ள மாணவிகள் தங்கி படிக்கும் அரசு பள்ளியில் 28 மாணவிகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பெண்களை வீட்டுக்கு அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இந்த நிலையில், ஆசிரியர்கள் உட்பட அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் பள்ளியில் 575 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாவட்ட சுகாதார அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தெலுங்கானா சுகாதாரத்துறை மந்திரி டி ஹரிஷ் ராவ், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்கவும், அப்பகுதியில் கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
நேற்று, 24 மணி நேரத்தில் தெலுங்கானாவில் புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.