வேளாண் சட்டங்கள்: பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் - மாயாவதி
வேளாண் சட்டங்கள் ரத்து விவகாரம் தொடர்பான பா.ஜனதாவினரின் முரண்பாடான கருத்துகளை தடுத்து நிறுத்துங்கள் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும். அவற்றுக்கு விரைவில் தீர்வு கண்டால், விவசாயிகள் திருப்தியுடன் வீடு திரும்புவார்கள். இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவார்கள்.
அதே சமயத்தில், பிரதமரின் அறிவிப்பையும் மீறி, சில பா.ஜனதா தலைவர்கள் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து, மக்கள் மனதில் சந்தேகத்தை உருவாக்கி வருகிறார்கள். இதனால் நல்லெண்ண சூழ்நிலை சீரழிகிறது. ஆகவே, அவர்கள் பேசுவதை பா.ஜனதா மேலிடம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.