யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன - அமித் ஷா

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் 69% குறைந்துள்ளன என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-02 15:58 GMT
லக்னோ,

 உத்தரபிரதேசத்தின் ஷாஹரன்பூர் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, நான் அகிலேஷ் யாதவின் பேச்சை டிவியில் கேட்டுக்கொண்டிருந்தேன், அவர் உத்தரபிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டதாக கூறுகிறார் . யோகி ஆதித்யநாத்  ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் (அகிலேஷ் யாதவ்) இடையிலான 5 ஆண்டு கால ஒப்பீட்டை நான் கொண்டு வந்துள்ளேன்.

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் 69% குறைந்துள்ளன.வரதட்சணை காரணமாக ஏற்படும் இறப்புகள் 22.5% குறைந்துள்ளன. அகிலேஷ் நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்று தரவுகளை சரிபாருங்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்