கணவன், குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை

கணவன், குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண் துப்பாக்கி முனையில் இரு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-04 07:08 GMT
Image Courtesy: rediff
போபால்,

கணவன், குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண் துப்பாக்கி முனையில் இரு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் காரில் அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.

சுற்றுலா பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்தினருடன் காரில் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். சுற்றுலா தளத்தில் இருந்து ரஹோஹர் என்ற பகுதியில் உள்ள அரோன் ரோடு என்ற சாலையில் வந்த போது அந்த காரை பைக்கில் வந்த இரண்டு பேர் இடைமறித்தனர். 

மேலும், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி காரில் இருந்த அப்பெண்ணையும், அவரது கணவரையும் கிழே இறங்கும்படி கூறியுள்ளனர்.
அந்த பெண் காரில் இருந்து கீழே இறங்கியவுடன் பைக்கில் வந்த ஒருவன் அருகில் உள்ள புதர் பகுதிக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

தடுக்க முயற்சித்த அந்த பெண்ணின் கணவனை மற்றொரு நபர் கொன்றுவிடுவேன் என்று துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளான். இதன்பின்னர் அந்த இரு நபர்களும் பைக்கில் தப்பிச்சென்றனர்.

தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அந்த பெண் ரஹோஹர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஈடுபட்ட சோனு (32), சுமீர் சிங் பர்மீர் (30) ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.      

மேலும் செய்திகள்