உத்தரபிரதேசம்: காங்கிரஸ் நடத்திய மாரத்தானில் 30 மாணவிகள் காயம்
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய மாரத்தானில் 30 மாணவிகள் காயமடைந்தனர்.
பரேலி,
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் ‘லட்கி ஹுன், லட் சக்தி ஹுன்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் பலரும் முண்டியடித்து ஓடியதால் பலர் கீழே விழுந்தனர். இதில் 30 மாணவிகள் காயம் அடைந்ததாக தெரிகிறது. உடனே காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீட்டனர். அவர்களில் சிலர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்காத பலரும் சேர்க்கப்பட்டதால் அதிகமானவர்கள் ஓடியதாகவும், இது விபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.