நாடாளுமன்ற ஊழியர்கள் 402- பேருக்கு கொரோனா
பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டில் பாதிப்பு அதிகம் காணப்படும் 2-வது இடமாக டெல்லி உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொற்று பரவலால் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 402- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரையில் 1,409 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் மரபணு வரிசை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.