ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் வெடிவிபத்து: கடற்படை அதிகாரிகள் 3 பேர் பலி; 11 பேர் காயம்

மும்பை கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-01-18 17:33 GMT


மும்பை,


ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், மும்பை கடற்படை தளத்தில் இன்று நடந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடனடியாக, கப்பல் சிப்பந்திகள் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  பெரிய அளவில் கப்பலில் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர்.

இந்த வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.  எனினும், இந்த வெடிவிபத்தில் கப்பலின் சிப்பந்திகள் 11 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்