எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிர்விட்ட வளர்ப்பு நாய் பாம்பும் செத்த பரிதாபம்

எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு வளர்ப்பு நாய் உயிர்விட்டது. இதில் நாகபாம்பும் செத்தது.

Update: 2022-01-29 00:18 GMT
ஹாசன், 

ஹாசன் அருகே எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு வளர்ப்பு நாய் உயிர்விட்டது. இதில் நாகபாம்பும் செத்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா சுக்ரவார சந்தை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு, அதேபகுதியில் தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மஞ்சுநாத், தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். உடன் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார். அதன்படி வளர்ப்பு நாய் தோட்டத்தில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தோட்டத்தில் நாகபாம்பு ஒன்று புகுந்து ஊர்ந்து சென்றுள்ளது. அந்த நாகப்பாம்பு, மஞ்சுநாத் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த வளர்ப்பு நாய் தனது எஜமானை காப்பாற்ற நாகபாம்ைப பார்த்து குரைத்து அதனை கடித்து குதறியது. இதற்கிடையே நாகபாம்பும், நாயை கடித்து பதம் பார்த்தது. ஆனாலும் நாய், நாகப்பாம்பை கடித்து கொன்று துண்டு, துண்டாக ஆக்கியது. பாம்பு இறந்த சில நிமிடங்களில் விஷம் ஏறி வளர்ப்பு நாயும் பரிதாபமாக செத்தது. வளர்ப்பு நாய் இறந்ததால் மஞ்சுநாத் கவலை அடைந்தார்.

மேலும் இந்த சம்பவத்தை மஞ்சுநாத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதழங்களில் பதிவிட்டுள்ளார். எஜமானரை காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டையிட்டு கொன்று உயிர்விட்ட வளர்ப்பு நாய் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்