என்னுடைய மனைவி ஒரு பெண்ணே அல்ல! விவாகரத்து கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட கணவன்

தன்னுடைய மனைவி ஒரு பெண்ணே அல்ல என தெரிவித்து விவாகரத்து கேட்டு ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-14 09:21 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

என்னுடைய மனைவி ஒரு பெண்ணே அல்ல என தெரிவித்து விவாகரத்து கேட்டு ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழ்க்கில் அவருடைய மனைவி முறையான பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்றும், அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவருக்கு தெரிய வந்தது.

அவர் தன் மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவருடைய மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தனது மனைவியை அழைத்து செல்லுமாறு தனது மாமனாரிடம் அவர் கூறினார். அதன் பின் அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மாமனார் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தனது மகளை சேர்த்துக்கொள்ளுமாறு மாமனார் அந்த நபரிடம் சண்டையிட்டுள்ளார்.

மிரட்டலால் பயந்துபோன அந்த நபர் போலீசிடம் புகார் அளித்தார். அதன் பின் அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுதாரரிடம் இருந்து முறையான மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கப்படவில்லை. வாய்மொழியாக கூறுவதை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது என கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

அந்த மனுவில் தனது மனைவியிடம் பெண்மை இல்லை என்றும், பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் அவரிடம் இல்லை என்றும், அவர் பெண்ணே இல்லை என்றும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும், இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் தன் மனைவியின் மருத்துவ தகவல்களையும் சமர்பித்து இருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கி‌ஷன் கவுல், எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக மனைவி பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்