பிரதமர் மோடி முன்னிலையில் கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்பு..!!
பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் விழாவில், கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
பனாஜி,
கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கோவா மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
கோவா மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜனதா பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
காலை 11 மணியளவில், பனாஜி அருகே சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.