கேரளா: மின் கசிவால் வீட்டில் தீ விபத்து? - கணவன், மனைவி உயிரிழப்பு...!

கேரளாவில் மின் கசிவால் வீட்டில் தீ பற்றிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த நிலையில் மகள் தீவிர சிசிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-04-25 08:00 GMT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது 50 ). இவருடைய மனைவி உஷா (45 ) மகள் ஸ்ரீதன்யா( 19 ). இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்க சென்றனர்.

இந்த நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவர்களது வீட்டில் இருந்த தீயும் புகையும் வெளியே வருவதைக் கண்டு திடுக்கிட்ட அக்கம்பக்கத்து வீட்டார்கள் உடனடியாக இதுகுறித்து தொடுபுழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டில் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவீந்திரன் மற்றும் மனைவி உஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மகள் ஶ்ரீ தன்யாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இவர்கள் வீட்டில் எவ்வாறு தீ பிடித்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் பல கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்