எரிபொருள் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன்
எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கொச்சி,
மத்திய அரசு கலால் வரியை குறைத்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த மாநிலங்கள் செயல்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர், முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் கருத்து தெரிவித்து உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கூறினார். மேலும், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.