தரையிறங்கும் முன் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்; படுகாயமடைந்த பயணிகளுக்கு தீவிர சிகிச்சை!

அந்த விமான பராமரிப்பு பொறியாளரை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் நீக்கியுள்ளது.

Update: 2022-05-02 16:46 GMT
மும்பை,

மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது.

அந்த விமானம் தரையிறங்கும்போது பெரிய அளவில் குலுங்கியுள்ளது.  எனினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார்.  விமானம் பின்னர் சீராக வந்து நின்றது.  இந்த சம்பவத்தில் பயணிகளின் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகள் அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்துள்ளன.  இந்த சம்பவத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.  இதனை ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களில் சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.  சிலர் சிகிச்சையில் உள்ளனர்.  

பயணிகளில் ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு டயமண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்ற பயணி முதுகுத்தண்டில் காயத்துடன் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் திவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். எனினும் அனைவரும் ஆபத்து கட்டத்தில் இருந்து நீங்கி விட்டனர் என அந்த விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானக்குழு ஊழியர்களை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் (டிஜிசிஏ) பட்டியலிட்டுள்ளது. அந்த விமான பராமரிப்பு பொறியாளர், முறையான விசாரணைக்கு முன் விமானத்தை துர்காபூரில் இருந்து கொல்கத்தா செல்ல அனுமதித்தார் என்பதால் அவரை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் நீக்கியுள்ளது. 

டிஜிசிஏ, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கல் வெளியாகியுள்ளன. அவசர காலத்தில், தானாக விமானத்தை கட்டுப்படுத்தும்  ‘ஆட்டோமெட்டிக் பைலட்’ துண்டிக்கப்பட்டதால், பல நிமிடங்களுக்கு விமானத்தை விமானிகள் தான் கைமுறையாகக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மேலும், விமானம் இறங்கும் போது பலமுறை பலமாக குலுங்கியது. இதனால் ஆக்ஸிஜன் முகமூடிகள் கீழே விழுந்தன, பயணிகளின் சாமான்கள் மற்றும் பிற பொருட்கள் தரையில் உருண்டன என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்