பீகாரில் ரெயிலை நிறுத்திவிட்டு ரெயில் ஓட்டுனர் மது அருந்த சென்றதால் பரபரப்பு..!

பீகாரில் ரெயில் ஓட்டுனர் மது அருந்த சென்றதால், பயணிகள் ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றது.

Update: 2022-05-03 13:38 GMT
பாட்னா,

பீகாரில் ரெயில் ஓட்டுனர் மது அருந்த சென்றதால்,  பயணிகள் ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதன் காரணமாக, சமஸ்திபூரிலிருந்து சஹர்சா செல்லும் பயணிகள் ரெயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரெயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ரெயில் நிலையத்தில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலின் உதவி ஓட்டுநர் மது குடிக்கச் சென்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.

நேற்று மாலை ராஜ்தானி விரைவு வண்டி கடந்து செல்வதற்காக, ஹசன்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.

அந்த நேரத்தில், ரெயிலின் உதவி லோகோ பைலட்(ஏஎல்பி) கரண்வீர் யாதவ் என்பவர், என்ஜினில் இருந்து காணாமல் போனார். சிக்னல் கொடுத்த போதும் ரெயில் நகராததால், ஹசன்பூர் ரெயில் நிலைய உதவி ஸ்டேசன் மாஸ்டர் இது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், ரெயில் தாமதமானதால் எரிச்சல் அடைந்த பயணிகள், சலசலப்பு ஏற்பட்டது. 

ஓட்டுனரை தேடுவதற்காக ரெயில்வே போலீஸ் அழைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியிலுள்ள உள்ளூர் சந்தைக்கு அருகில் நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத அளவுக்கு போதையில் இருந்த ஓட்டுனரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

இதற்கிடையில், அதே ரெயிலில் பயணித்த மற்றொரு ஏஎல்பிக்கு ஸ்டேஷன் மாஸ்டர் மெமோ கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்த கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) அலோக் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, எட்டு நாட்களுக்கு முன்னர், குவாலியர்-பரவ்னி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் ஒருவர், டீ அருந்துவதற்காக பீகாரில் உள்ள சிவான் ஸ்டேஷன் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் அருகே ரயிலை நிறுத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் எட்டு நாட்களுக்குப் பிறகு நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்