மானநஷ்ட வழக்கு செலவுக்காக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெற்ற ரூ.15 லட்சத்தை திருப்பித்தர வேண்டும்: தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு

இல்லாவிட்டால், அதற்கடுத்த 30 நாட்களுக்குள் அப்பணத்தை மாநில அரசு வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2022-05-03 23:18 GMT
கோப்புப்படம்
ஐதராபாத், 

தெலுங்கானா மாநில பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் என்பவருக்கு எதிராக ஆங்கில வார பத்திரிகை ஒன்று கடந்த 2015-ம் ஆண்டு செய்தி வெளியிட்டது. அதனால், அந்த பத்திரிகைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்த ஸ்மிதா, வழக்கு செலவுக்கு பணம் கோரி மாநில அரசிடம் விண்ணப்பித்தார்.

அதை ஏற்று அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தெலுங்கானா ஐகோர்ட்டில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ்சந்திர சர்மா, நீதிபதி அபிநந்த் குமார் சாவிலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தனிப்பட்ட வழக்குக்காக அரசு பணத்தை அளித்தது தவறு என்று கூறியது.

எனவே, 90 நாட்களுக்குள் அந்த ரூ.15 லட்சத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்பித்தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அதற்கடுத்த 30 நாட்களுக்குள் அப்பணத்தை மாநில அரசு வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்