மதுவை பங்கு வைப்பதில் தகராறு நண்பரை வெட்டிக்கொன்ற பெண் கைது

இடுக்கி அருகே மதுவை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-05 23:14 GMT
பாலக்காடு.

இடுக்கி அருகே மதுவை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் வசிப்பவர் அப்துல் சலாம் (வயது 52). அதே பகுதியில் வசித்து வருபவர் செலினா (45). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். அப்துல் சலாமும், செலினாவும் இரவு நேரத்தில் ஒன்றாக மதுஅருந்துவதும், தொடுபுழா பஸ் நிலையத்தில் தங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 2 பேரும் மது அருந்தினர். அப்போது மதுவை பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செலினா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்துல் சலாமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அப்துல் சலாம் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை அக்கம், பக்கத்தினர் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்துல் சலாமை மீட்டு தொடுபுழா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செலினாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அப்துல் சலாமை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்