மராட்டியம்: பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்திய 5 பேர் கைது
மராட்டியத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை மிரட்டி வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தஹிசர் மோரி மற்றும் தாகூர்பாடா கிராமங்களில் வசிப்பவர்களை வாள், கோடாரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி ஐந்து பேர் கொண்ட கும்பல் பயமுறுத்தி வந்துள்ளனர். அவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறிப்பிட்ட காரணம் ஏதுமின்றி வீடு வீடாக சென்று கதவை தட்டி பயமுறுத்தியுள்ளனர்.
இதனால், பொதுமக்களிடையே பீதி நிலவியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அப்பகுதி மக்கள் தைரியத்துடன் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இந்தக் கும்பலில் மேலும் சிலர் இருந்ததாகவும், அவர்களைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர்களின் இத்தகைய செயலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.