இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய தூதரகம் விளக்கம்

அசாதாரண சூழல் நிலவும் இலங்கைக்கு பாதுகாப்பு படைகள் எதுவும் அனுப்பும் திட்டம் இல்லை என்று இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-05-11 06:14 GMT
Photo Credit: AP/ PTI
புதுடெல்லி,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.  

 மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில், நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா படைகளை அனுப்பலாம் என்று இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கைக்கு படைகள் எதுவும் அனுப்பப்படாது” என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- “ 

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை  இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இத்தகைய  தகவல்கள் இந்தியாவின் நிலைப்பாடு  கிடையாது.  இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்று நேற்று இந்திய வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்