ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நகியான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-13 14:07 GMT
கோப்புப் படம்
புதுடெல்லி,

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். அவருக்கு வயது 74. 

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஷேக் கலீஃபா பின் சையத் அவர்கள் காலமானதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். 

அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் சிறந்த தலைவராக இருந்தார். அதன் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகள் செழுமையடைந்தன. இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு அமீரக மக்களுடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்